Natarajar

Natarajar
ஈரோடு சைவ சித்தாந்த சபை தங்களை இனிதே வரவேற்கிறது

Sunday, 4 January 2015

எந்நாட்கண்ணி (பாடல் 1)

சீர்மிகு தாயுமானார் அருளிய
எந்நாட்கண்ணி - உரை
                                                                                  - முனைவர் ர.வையாபுரி ஐயா அவர்கள்


தெய்வ வணக்கம்
சிவபரம் பொருள்

நீர் பூத்த வேணி நிலவு எறிப்ப மன்று ஆடும்
கார் பூத்த கண்டனை யான் காணும் நாள் எந்நாளே

     நீர்             - கங்கை
     பூத்த        - பொலிவுடன் விளங்குகின்ற
     வேணி    - சடை
     நிலவு        - பிறை மதியின் ஒளி
     எறிப்ப       - வீச
     மன்று        - சிதம்பரத்தில் உள்ள  ஞான சபை, மன்றுள் நின்று என்க
     ஆடும்        - ஆனந்தத் தாண்டவம் செய்யும்
     கார்             - கருமை, நஞ்சினால் உண்டாகிய கருநிறம்
     கண்டன்    - கழுத்து உடையவன்
     காணுதல் - தன் (ஆன்ம) அறிவில் விளங்கும்படி அறிதல், “பதியை ஞானக்                                  கண்ணினில் சிந்தை நாடுக” - சிவஞான போதம் நூ.9

Friday, 19 December 2014

தாயுமானார்

தாயுமானார் 
                                                                     - முனைவர் ர.வையாபுரி ஐயா அவர்கள்

             இவர்  திருமறைக்காடு என்னும் தலத்தைச் சார்ந்த சைவ வேளாளரான கேடிலியப்பர் கெஜவல்லியம்மை என்பார்க்கு மகவாகத் திருச்சிராப்பள்ளி என்னும் தலத்து இறைவனாகிய தாயுமானார் திருவருளால் தோன்றிவர்.

                இவர் பிறந்த காலத்து இவருடைய தந்தையார் திருச்சிராப்பள்ளியில் இருந்து அரசு செய்த விஜயரங்க சொக்கநாத நாயக்கருக்கு அணுக்கராய் அரசு அலுவல்களைக் கவனித்து வந்தார்.

                தாயுமானார் இளம்பருவத்தில் கற்க வேண்டிய உலகியல் கல்வியுடன் ஞானநூல் கல்வியும் பெற்றுச் சிறந்து விளங்கித் தந்தையாருக்குப் பின் அந்நாயக்க மன்னரிடத்துத் தந்தையைப் போலவே அணுக்கராய் அரசு அலுவல்களைக் கவனித்து வந்தார்.

                     எனினும் தாயுமானார்  உள்ளம் இறையருள் நாட்டத்திலேயே இருந்தது. அப்பொழுது திருமூலதேவ நாயனாரின் மரபினரும் மெய்கண்டாரது அத்துவிதக் கோட்பாட்டில் தெளிவுடையவரும் சிவஞான சித்தியை வழிகாட்டும் நூலாகக் கொண்டவருமாகிய மௌனகுரு என்பவரின் உபதேசம் இத்தாயுமானாருக்குக் கிடைத்தது.

                    இத்தாயுமானார் பின்னர் சிலகாலம் உலகியல் வாழ்வை மேற்கொண்டிருந்து பின்னர் துறவு வேட்கை உடையராய் முழுத் துறவு மேற்கொண்டு பல தலங்களை வழிபட்டு இராமேச்சுரம் சென்று வழிபட்டு இராமநாதபுரத்தின் பாங்கர்த் தங்கியிருந்து திருவடியடைந்தார்.

                  இவர் சிவயோக நெறியிலும் சிவஞான சித்தி நூலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார். தம் அனுபவங்களையெல்லாம் விருத்தப்பாக்களாகவும் கண்ணிகளாகவும் பாடி வைத்தார்.

                     இவர் காலம் கி.பி 18 ஆம் நூற்றாண்டு என்பர்.

Tuesday, 18 November 2014

திருச்சிவபுரம் வரலாறு

திருச்சிவபுரம் வரலாறு
                                                                                  - முனைவர் ர.வையாபுரி ஐயா

தலம் :
                  திருச்சிவபுரம் என்னும் இத்தலம் காவிரித் தென்கரைத் தலங்கள் நூற்றிருபத்தேழனுள் அறுபத்தேழாவது தலமாக அமைந்துள்ளது. கும்பகோணத்துக்கு அருகில் அரிசிலாற்றங்கரையில் உள்ளது. திருஞானசம்பந்த நாயனார் அருளிய மூன்று பதிகங்கள். திருநாவுக்கரசு நாயனார் அருளிய ஒருபதிகம் ஆக நான்கு பதிகங்களைப் பெற்றது.

                      இத்தலத்து 
                                    இறைவன் பெயர் - பிரமபுரிநாதர், சிவபுரநாதர்
                                    இறைவி பெயர்    - பெரிய நாயகி, சிங்கார வல்லி
                  இரணியாட்சன் என்னும் அசுரன் பூமியைக் கடலுள் ஒளித்து வைத்தான். திருமால் வெண்பன்றி (சுவேதவராகம்) உருவாய்ச் சென்று அப்பூமியைத் தன் கொம்பினால் மீட்டு வந்தார். வெண்பன்றி உருவாய் இருந்த திருமால் இத்தலத்தில் வழிபாடு செய்தார். 
                              தலமரம்  - சண்பகம்
பதிகம் :
                  திருஞானசம்பந்த நாயனார் அருளிய “புவம்வளி கனல் புனல்” என்னும் பதிகம் நட்டபாடைப் பண்ணில் அமைந்தது. மேலும் திருவிராகம் என்னும் யாப்பமைதியினையும் உடையது. இதில் இராகம் என்பது முடுகி (விரைவு)ச் செல்லும் ஓசை. இப்பதிகத்தில் வரும் சீர்களெல்லாம் குறிலிணை நிரையசைகளாகவே அமைந்துள்ளன. இவ்வோசையை இசைத்துப் பார்த்துப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். 
                                  இப்பதிகம் சிவபரம்பொருள் ஐந்தொழில் செய்வதற்காகக் கொள்ளுகின்ற தடத்த வடிவங்களுள் அயன், மால், உருத்திரன், மகேசன். சதாசிவன் என்னும் வடிவங்கள் கொண்டு படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் நிலையினையும் அதற்கேற்ற வடிவங்களையும் கூறுகின்றது.
                    இவ்வடிவங்கள் சிவபேதம் எனப்படும். இவற்றுக்குரிய சத்தி பேதங்களும் உள்ளன. இவற்றை
                                                 சிவம்சத்தி நாதம் விந்து
                                                              சதாசிவன் திகழும் ஈசன்
                                                  உவந்தருள் உருத்திரன்தான் மால்
                                                              அயன் ஒன்றின் ஒன்றாய்ப்
                                                   பவம்தரும் அருவம்நால் இங்கு
                                                               உருவம் நால் உபயம் ஒன்றாய்
                                                    நவந்தருபேதம் ஏகநாதனே நடிப்பன் எனவும்

(சிவம் - பரநாதம்; சத்தி - பரவிந்து; நாம் - அபரநாதம்; விந்து - அபரவிந்து; பவம் தரும் - தோன்றும். நால் - நான்கு; உபயம் - இரண்டு, அருவமும் உருவமுமாகிய அருவுருவத் திருவுருவத் திருமேனி; நவம் தருபேதம் - ஒன்பது வகையாக வெளிப்படும் வடிவ, பெயர் - வேறுபாடுகள். நவம் - ஒன்பது, பேதம் - வேறுபாடு, ஏகநாதன் - ஒருவனாகிய தலைவன் - சிவம்)

                           “சத்தியாய் விந்து சத்தியாய் மனோன்மணி தானாகி
                             ஒத்துறு மகேசை யாகி உமைதிரு வாணியாகி
                             வைத்துறும் சிவாதிக்கு இங்ஙன் வரும் சத்தி ஒருத்தியாகும்
                             எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பன்”  
எனவும் வரும் சிவஞான சித்தியார் சுபக்கச்செய்யுள்களால் (164,165) அறியலாம்.
                           சத்தி - பரவிந்து, விந்து சத்தி - அபர விந்து, சிவாதிக்கு - சிவம் முதலிய பேதங்களுக்கு; ஒருத்தி - சிவசத்தி.



                                                            சிவபேத                                          சத்தி பேதங்கள்

                                               1. சிவம் (பரநாதம்)               -                சத்தி (பரவிந்து)
                                               2. நாதம் (அபர நாதம்)         -                விந்து (அபர விந்து)
                                               3. சதாசிவன்                            -                மனோன்மணி
                                               4. மகேசன்                               -                மகேசை
                                               5. உருத்திரன்                          -                உமை
                                               6. திருமால்                              -                திருமகள்
                                               7. அயன்                                    -                கலைமகள்

(சத்தி பேதம் 7, சிவபேதம் 7, சத்தி, விந்து என்னும் சத்தி பேதங்கள் சிவபேதத்துள் வைத்து எண்ணப்படும். அவ்வகையால் சிவபேதம் 9 எனப்படும்)
                               இப்பேதங்களைக் கடந்து நிற்கும் சிவம் சொரூப சிவம் எனப்படும். இது தத்துவாதீதம் . இந்தச் சாத்திரக் கருத்தை உணர்ந்து கொண்டு இப்பதிகத்தை ஓதினால் உண்மைப் பயன் கிடைக்கும். உணர்ந்து கொள்ளாமல் ஓதினால் தவறான உணர்வுகளுக்கு (கதைகளில் பேசப்படுகின்ற பிரம்மாவும் சிவணும் ஒருவரே. திருமாலும் சிவனும் ஒருவரே, உருத்திரனும் சிவனும் ஒருவரே. எல்லா வடிவங்களும் ஒரே கடவுளைத்தான் குறிப்பிடுகின்றன என்னும் உணர்வு) இடம் உண்டாகும்.
                               புண்ணியமும் தகுதியும் உடைய ஆன்மவர்க்கத்தினர் சிலர் படைத்தல் முதலிய தொழில் செய்யும் ஆசையால் சிவபரம் பொருளை வழிபட்டுப் பிரம்மா, திருமால் முதலிய பெயர்களையும் வடிவங்களையும் பெற்றுத் தொழில் செய்வர். இந்தப் பிரம்ம விஷ்ணுக்கள் வேறானவர். இவர்களே கதைகளில் பேசப்படுபவர். இவர்கள் அணுபஷத்தினர் எனப்படுவர். (அணு - ஆன்மா) மேலே குறிப்பிடப்பட்ட பேதங்கள் சம்பு பஷம் - சம்பு - சிவம், சம்பு - சிறந்த இன்பத்தைத் தருபவன் என்பது பொருள்.
                        மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் மூன்றனுள் இப்பதிகம் தலத்தின் சிறப்பைக் கூறுவதாய் எல்லாப் பாடல்களிலும் சிவபுரம் நினைபவர் என்றே கூறிச் செல்கிறது. மூர்த்தியின் சிறப்பையும் சிவனது சிவபுரம் என இணைத்துக் கூறுகின்றது.
                            மூன்றாம் பாடல் “ சிவபுரநகர் தொழுமவர்” என்று கூறுகிறது. எனவே சென்றும் தொழலாம். இல்லத்திலிருந்தே நினைந்தும் தொழலாம். நினைபவர் எனவரும் இடங்களில் தொழுமவர் என்பதையும் கூட்டி நினைந்து தொழுமவர் எனவும் தொழுமவர் எனவரும் இடத்தில் நினைந்து என்பதையும் கூட்டி நினைந்து தொழுமவர் எனவும் உரைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
                 சிவபுர நகரத்துக்குச் சென்று சிவபரம்பொருளைத் தொழ வேண்டும் என்று பலகாலம் ஆசையால் நினைந்திருந்து வாய்ப்புக் கிடைத்த போது சென்று தொழ வேண்டும் என்பது கருத்து. சென்று தொழுவதைக் காட்டிலும் சென்று தொழவேண்டும் என்று நினைந்து நினைந்து நிறபதும் ஓர் அனுபவம்.
            

Tuesday, 7 October 2014

பிரவாகாநாதி

பிரவாகாநாதி
                                                                                      - முனைவர் ர.வையாபுரி ஐயா அவர்கள்

        ஒருவன் ஓராற்றில் நீரைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனுடைய பார்வை குறிப்பிட்டதொரு புள்ளியில் நிலைத்திருக்கிறது. அப்புள்ளியில் அவன் பார்க்கும் போது இருந்த நீர் ஓடுகிறது வருகிற நீர் அந்த இடத்தை நிரப்புகிறது. அதனால் அவன் பார்வை நிலைத்திருந்த  புள்ளியில் நீர் நிலையாக இருப்பது போல் தோன்றுகிறது. இங்ஙனம் நிலையாக நிற்பதாகக் கருதுவது பிரவாக நித்தம் எனப்படும். இதனைப் பிரவாக + நித்தம் எனப்பிரித்துக் கூறுதலும் உண்டு. பிரவாகம் போன்ற நித்தம் என்று சொன்னாலும் பிரவாகம் போன்ற அநித்தம் என்று  சொன்னாலும் கருத்து ஒன்றே.

         இந்நீரோட்டத்தைப் போலவே வினை காரணமாகப் பிறப்பு வரும். பிறப்பில் வினையில் விளைவு (இன்பம்,துன்பம்) அனுபவத்துக்கு வரும். அதனை அனுபவிக்க முயற்சி செய்தல் வேண்டும். அனுபவத்தால் அந்த வினை நசிக்கும். அம்முயற்சி மீண்டும் புதிய வினையாக ஏறும். அந்த வினையால் மீண்டும் பிறப்பு வரும்.

          இவ்வாறு வினையும் இடையறாது நீர் பெருக்குப் போல் வந்து கொண்டே இருக்கும். பிறப்பும் நீர்ப் பெருக்குப் போல் வந்து கொண்டே இருக்கும். சுருங்கக் கூறின்,

       சஞ்சிதத்திலிருந்து பிராரத்த அனுபவம். பிராரத்தத்திற்கு முயற்சி. முயற்சியால் ஆகாமியம். ஆகாமியம் சஞ்சிதத்தில் சேரும் என்பதே வினைச் சுழற்சி என்பதாகும்

Friday, 22 August 2014

திருநடனம்

திருநடனம்

- பேராசிரியர் முனைவர் ர. வையாபுரி எம்.ஏ., பிச்.டி.,

           நடனம், நடம், நாட்டியம், நிருத்தம், நாடகம், கூத்து என்னும் சொற்கள் அனைவரும் கேட்டிருப்போம். நடனம், நடம், நாட்டியம், நிருத்தம் என்பன ஒருவரே நிகழ்த்துவது. நாடகம், கூத்து என்பன பலர் கூடி வேடம் அணிந்து நிகழ்த்துவது

    நடனம் ஆடுபவரும் நாடகம் நடிப்பவரும் உரையாடலினாலும் பாடலினாலும் நகை, அச்சம், கோபம், வீரம், வியப்பு, சாந்தம் முதலிய குறிப்புகளை முகக் குறிப்பு, கண் குறிப்பு, அங்க அசைவு முதலியவற்றுடன் கூட்டி வெளிப்படுத்துவார்கள். இவை காண்பவரிடத்தும் பற்றிக் கொள்ளும். நடனம் ஆடுபவரும் நாடகம் நடிப்பவரும் நகை, அழுகை முதலியவற்றை வெளிப்படுத்தி அந்த அந்தக் கதை மாந்தர்களாகவே காணப்பட்டாலும் உண்மையில் அவர்கள் அந்தக் கதை மாந்தர்களின் வேறாகவே இருப்பார்கள்.

        இது நாம் கண்டு மகிழ்கின்ற நாடகம். நாம் காணாமலே நிகழ்கின்ற நாட்டியம் - நாடகம் - ஒன்று உண்டு. நாடகம் ஆடுபவனை நாம் காண்பதில்லை. ஆனால் நாம் அந்த நாடகத்தில் அகப்பட்டு ஆடுகிறோம். அவன் தன் நாடகத்தால் - நாட்டியத்தால் - நம்மை ஆட்டி வைக்கிறான்.

           அவன் யார் ? அவன் தான் இறைவன். அவன் தனக்கு ஒருபயன் கருதி ஆடுவதில்லை. நாம் பயன் பெறுவதற்காக ஆடுகிறான். அவனை ஆடும் பெருமான், ஆடல் வல்லான், நடேசன், நடராஜன், கூத்தன், கூத்தப் பெருமான் எனப் பல பெயர்களால் குறிப்பிடகின்றோம்.

        அவன் ஆடுவற்குத் துணையாய் இருப்பவர் ஒருவர் மட்டுமே. அவர் எப்பொழுதும் அவனை விட்டுப் பிரிவதில்லை. அவர் யார் ? அவர்தான் அவ்விறைவனின் சக்தி. சத்தியை நாம் சிவகாமியம்மை, அம்பிகை, அம்பாள் என்ற பெயர்களால் பெண் வடிவத்தில் குறிப்பிடுகின்றோம். இச்சத்தி இறைவன் ஆடும் நடனத்தில் இரண்டு வேடம் உடையவளாகப் பங்கு பெறுகிறாள். ஒரு வேடம் அருட்சத்தி எனப்படுகிறது. மற்றொரு மறைப்புச் சத்தி (திரோதான சத்தி) எனப்படுகின்றது.

                              இறைவன் நடனம் செய்வதற்கு இடமாயிருப்பது ஞான ஆகாசம் - சிதம்பரம். மற்றும் மாயையின் காரியமான தத்துவங்களால் ஆகிய உலகம் - பிரபஞ்சம். இவையன்றி - நம்முடைய - ஆன்மாக்களினுடைய - அறிவு இடமாகும்

           நாடகத்தில் இறைவன் என்னென்ன குறிப்பை வெளிப்படுத்த வேண்டுமோ அதற்கேற்ப வேடமும் புனைந்து கொள்வான். ஆனால் அவன் அந்தந்த வேடங்களினால் விகாரம் அடைய மாட்டான். தன் உண்மை நிலையில் திரிபு அடைய மாட்டான். அவன் ஆடும் நாட்டியத்தில் தான் செய்யப்போகும் தொழிலுக்கு ஏற்ற குறிப்புகளைத் தன் அவயவத்தால் வெளிப்படுத்துவான். அவன் ஆடும் நாடகத்தின் - நாட்டியத்தின் - குறிக்கோள் நம் அறிவில் - ஆன்மாக்களின் அறிவில் - அநாதியே கலந்து நின்று அறிவு விளக்கத்தைத் தடை செய்து கொண்டிருக்கும் பொருளாகிய ஆணவ மலத்தின் சத்தியை மெலியச்செய்து மீண்டும் மேலெழாதபடி அடங்கியிருக்கச் செய்வதேயாகும். இதற்கு அவன் இரண்டு பொருள்களைக் கருவியாகப் பயன்படுத்துகின்றான். அவை யாவை? மாயை என்றும் கன்மம் என்றும் சொல்லப்படும் மலங்கள்.

                  மாயை , கன்மம் என்னும் கருவிகளைத் தன் துணையாகிய திரோதான சத்தியைினால் இயங்க வைக்கின்றான். இதனால் நமக்கு - ஆன்மாக்களுக்கு - உலக அனுபவம் - வினை செய்தல், வினையின் பயனாகிய இன்பத் துன்பங்களை அனுபவித்தல் - இறத்தல் , பிறத்தல் உண்டாகின்றன. இதனால் நம் - ஆன்மாக்களின் - அறிவில் கலந்துள்ள ஆணவமல சத்தி மெலிவடைகின்றது.

                                        மெலிவடைந்த மலசத்தி மீண்டும் மேலெழாதபடி அடங்கிக் கிடக்கச் செய்வதற்குத் தனது ஞானம் என்னும் கருவியைப் பயன்படுத்துகின்றான். இதனைத் தனது அருட்சத்தி என்னும் துணையினால் நிகழச் செய்கிறான். இதனால் நமக்கு - ஆன்மாக்களுக்கு - சிவானந்தம் விளைகிறது. எனவே நமது - ஆன்மாக்களின் - உலக வாழ்வுக்கும் இறைவனுடைய நடனம் தேவை; முத்திப் பேற்றுக்கும் தேவை என்பதை உணர்தல் வேண்டும்.

                        இந்த நடனம் ஐந்தொழில் திருக்கூத்து எனப்படும். இது ஊன நடனம், ஞான நடனம் என இருவகைப்படும். ஊன நடனம் - ஊனம் - குறைவுடைய கன்ம அனுபவங்களைத் தரும் நடனம். அதாவது “ந” என்னும் எழுத்தால் குறிப்பிடப்படும் திரோதான சத்தியால் மாயை, கன்மங்களைத் தொழிற்படுத்தி ஆன்மாவுக்கு உலக அனுபவத்தைக் கொடுப்பது. இதனால் “ம” என்னும் எழுத்தால் குறிப்பிடப்படும் ஆணவ மலத்தின் சத்தியை மெலிவடையச் செய்வது. கன்ம அனுபவம் ஆணவமல சத்தி குறையும் வரையிலும் தரப்படும். பின்பு நீக்கப்படும். அவ்வனுபவம் பிறப்பு, இறப்புக்களுக்குக் காரணம். அதனால் அது ஊனம் எனப்படும்.

                  ஞான நடனம் என்பது “வ” என்னும் எழுத்தால் குறிப்பிடப்படும் திருவருட் சத்தியினால் சிவஞானத்தை அளித்து அதனால் சிவானுவபத்தைக் கொடுப்பது. சிவானுபவமே ஆன்மாவுக்கு உதிய அனுபவம். இது குறைதலும் இல்லை. நீங்குதலும் இல்லை. மேன்மேலும் வளர்தோங்குவது. இது சிவஞானத்தால் நிகழ்வது ஆதலின் ஞான நடனம் எனப்படும். இதுவே முத்தியைத் தருவது. இதைப் பெற்ற ஆன்மாவுக்கு மீளப் பிறத்தல் இல்லை.

         ஊன நடனம் முன்னர் நிகழ்ந்தால் தான் பின்னர் ஞான நடனம் நிகழ்வதற்கு வழி ஏற்படும். ஆதலின் ஊன நடனமும் - கன்ம அனுபவமும் - உலகியல் அனுபவமும் - வேண்டத்தக்கதே. சிவயநம என்பதில் “ய” - ஆன்மா - நடுவில் நிற்கிறது. இடப்பக்கத்தில் “ந ம” - ஊன நடனம். வலப்பக்கத்தில் “சி வ” - ஞான நடனம். கன்ம அனுபவத்தின் போது மந்திரம் - நமசிவய. ஞான அனுபவத்தின் போது மந்திரம் - சிவயநம. நமசிவய என்பது இறைவனுக்குப் பெயம் ஆகும்.

ஐந்தொழில் திருக்கூத்தில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் நான்கும் ஊன நடனம். அருளல் - ஞான நடனம். படைத்தல், காத்தல், அழித்தல் என்பன உடம்பிலும் உலகத்திலும் நடைபெறும். மறைத்தல், அருளல் என்பன ஆன்ம அறிவில் நிகழும். ஊன நடனம் பெத்த (மலத்தில் கட்டுப்பட்டிருக்கும் நிலை) நிலை. ஞான நடனம் முத்தி நிலை. ஆனந்த நிலை.

Tuesday, 22 July 2014

சுத்தாத்துவித சித்தாந்த சைவம்

சிவமயம்

சுத்தாத்துவித சித்தாந்த சைவம்
- பேராசிரியர் முனைவர் ர. வையாபுரி எம்.ஏ., பிச்.டி.,
     
                இன்று சைவம் என்றும் சைவ சித்தாந்தம் என்றும் வழங்கப்படும் தத்துவ ஞானத்துக்குச் சுத்தாத்துவித சித்தாந்த சைவம் எனப்பெயர் வழங்குவர்.

     சுத்தாத்துவிதம் என்பது உபநிஷதங்கிலும் சிவாகமங்களிலும் இடம் பெற்றுள்ள அத்துவிதம் என்னும் சொல்லுக்குப் பொருள் கொள்ளுகின்ற முறையை உணர்த்துவது. சுத்தாத்துவிதம் என்பது சித்தாந்த சைவத்தின் உயிர் நாடியான கொள்கை.

     அத்துவிதம் என்பது எண்ணுப்பெயர் . துவிதம் - இரண்டு, அத்துவிதம் -ஒன்று

    பெரும்பாலோர் அத்துவிதம் என்பதற்கு ஒன்று என்றே பொருள் கொண்டனர்.  அந்த ஒன்று என்னும் பெயரால் குறிப்பிடப்படுவது பிரம்மம். எனவே பிரம்மப் பொருள் ஒன்று மட்டுமே உள்ளது. அதற்கு இரண்டாவதாக ஒருபொருள் எனக்குறிப்பிடுவதற்கு எப்பொருளும் இல்லை. இருப்பனவாகத் தோன்றும் பொருள்களெல்லாம் வெறும் தோற்றமே. அங்ஙனம் ஒன்றாக இருக்கும் பிரம்மமும் குணங்கள், தொழில்கள் முதலியவற்றால் விசேடிக்கப்படாமல் பொருள் மாத்திரமாக இருந்து கொண்டிருக்கும், இங்ஙனம் விசேடிக்கப்படாமல் தான் மாத்திரமாக - தனி ஒரு பொருள் மட்டுமாக - இருத்தல் கேவலம் எனப்படும். ஆதலின் இவ்விளக்கம் கேவல அத்துவிதம் எனக் கூறப்படும். நிர்விசேஷ அத்துவிதம் என்பதும் இதற்குப் பெயர். நிர் விசேஷம் - விசேஷம் இன்மை. விசேஷம் - அடைமொழியால் சிறப்பித்துக் கூறப்படுதல்.

         வேறு சிலர் பிரம்மப் பொருள் ஒன்று மட்டுமே உள்ளது. என்னும் அது தான் குணங்களாலும் தொழில்களாலும் விசேஷத்துக் கூறப்படுவது. அந்தப் பிரம்மப் பொருளும் சித்துப் பொருள்களாகிய ஆன்மாக்களையும் அசித்துப் பொருள்களாகிய  பிரபஞ்சத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டு அவற்றுக்கு ஆன்மாவாய் - சரீர சரீரி பாவமாய் - உள்ளது. இங்ஙனம் தொழில், குணம், ஆன்மா, பிரபஞ்சம் என்பன உள்ளன எனக்கூறப்பட்டாலும் பிரம்மப் பொருள் ஒன்று மட்டுமெ உள்ளது. அது விஷ்ணு எனக் கூறப்படும். இது விசேஷ அத்வைதம் எனக் கூறப்படும். விசேஷம் - சிறப்பு. இதனை விசிஷ்டம் - விசேஷணத்தால் விசேஷிக்கப்படுவது - எனவும் கூறுவர். இது விசிஷ்டாத்வைதம் எனப்படும்.

    சைவ சித்தாந்திகள்  ”அத்துவிதம் என்பது ஒன்றா? இரண்டா? என்பதை உணர்த்தும் சொல்லன்று. இரண்டு பொருள்களுக்கிடையே (சிவம், ஆன்மா) உள்ள இயைபினை உணர்த்துவது. சிவமும் ஆன்மாவும் பொருளால் இரண்டாக இருந்தாலும் பெத்தத்திலும் (பாசங்களால் பந்தப்பட்ட நிலை) முத்தியிலும் (பாசங்களிலிருந்து விடுபட்ட நிலை) பிரிப்பின்றி இயைந்தே நிற்கும். ஆதலின் பொருள் ஒன்று எனவும் கூறுதல் இயலாது. இரண்டு எனவும் கூறுதல் இயலாது. ஆதலின் அத்துவிதம் - இரண்டற்ற நிலை - எனக் கூறப்படும் ” என்பர். இங்ஙனம் பொருள் கூறுவதற்கு கேவலம், விசேஷம் முதலிய அடைமொழிகள் தேவையில்லை. அடைமொழிகள் இல்லாமலே - அத்துவிதம் என்ற சொல் - இரண்டற்றது என்றும் பொருளை உணர்த்தும். ஆதலின சுத்தம் - சுத்தாத்துவிதம் - எனப்படும். சுத்தம் என்பது கேவலம், விசஷ்டம என்னும் அடைமொழிகள் இல்லாதது என்னும் பொருளை உடையது. சுத்தம் என்பதும் ஒரு அடைமொழி தானே எனின் இரு முன்னர்க் கூறிய கேவலம், விசிஷ்டம் என்னும் பலவற்றுக்கு வேறானது என வேறுபடுத்திக் காட்டுவதற்காகக் கூறப்படுவது ஆதலின் அந்த வினாவுக்கு இடம் இல்லை.

    சிலர் சுத்தாத்துவிதம் என்பதற்கு சுத்தத்தில் அத்துவிதம் (ஒன்று) பெத்தத்தில் துவிதம் (இரண்டு) எனப் பொருள் காண்பர். சைவ சித்தாந்தம் பெத்தத்திலும் சுத்தத்திலும் சிவமும் ஆன்மாவும் பிரிப்பின்றியே இருக்கும் என்னும் கொள்கையுடையது ஆதலின் இவ்விளக்கம் பொருந்துவதன்று.

       இங்ஙனம் அத்வைதம் என்பதற்குச் சைவ சித்தாந்தம் இரண்டற்றது எனப் பொருள் கொள்ளுதலின் இது சுத்தாத்துவித சைவம் எனப்படும்.

Thursday, 17 July 2014

சிவநேயச் செல்வர்களே ஓர் அறிவுப்பு

சிவமயம்


20.07.14 ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு சித்தாந்த பஃறொடை (திருவாவடுதுறை ஆதீன பண்டார சாத்திரம்) மற்றும் 2.30 மணிக்கு  சிதம்பர மும்மணிக்கோவை ( குமரகுருபரர் பிரபந்தம்). 

விளக்கவுரை வழங்குபவர் : பேராசிரியர் முனைவா்.ர.வையாபுாி ஐயா. (முதல்வர் (பணி ஓய்வு), தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா. அ.கு.எண் 641 010).

இடம் : செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு.

Wednesday, 9 July 2014

சைவ மடங்கள்

சிவமயம்

சைவ மடங்கள்
- பேராசிரியர் முனைவர் ர. வையாபுரி எம்.ஏ., பிச்.டி.,
  
    மடம். இச்சொல் தமிழில் அறியாமை என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. வடமொழியில் (ட - டகர வரிசையில் இரண்டாவதாக உள்ள எழுத்து) துறவிகளின் இருப்பிடம் என்னும் பொருளில் வழங்கப்படுகின்றது.
                 பழங்காலத்தில் தத்துவஞானிகளும், துறவிகளும் தனியே ஓரிடத்தில் இருந்து யோக நெறியில் பழகுதல், கடவுள் வழிபாடு செய்தல், தத்துவ ஞான நெறியில் பழகுதல், தங்களை நாடி வருபவர்களுக்கு அறநெறியினையும் தத்துவ ஞானத்தையும் கற்பித்தல் ஆகிய பணிகளைச் செய்து வந்தனர். இம்மடங்களுள் சைவ மடங்கள் பிற்காலத்தில் சைவ ஆதீனம் என்னும் பெயரில் குறிப்பிடப்பட்டன.
       பாரத நாட்டில் காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை இத்தகைய மடங்கள் பல இருந்தன. தமிழகத்தில் சைவ சமய நெறியில் நின்ற மடங்கள் பதினெட்டு இருந்தன. இவை பதினெண் மடங்கள் என்று அல்லது சைவ ஆதீனங்கள் பதினெட்டு என்று ஒரு தொகையாகக் கூறப்படுகின்றன. அபிதான சிந்தாமணி என்னும் நூல் சுத்த சைவ பதினெண் ஆதீனங்கள் என்னும் தலைப்பில் (இரண்டாம் பதிப்பு - பக்கம் - 1609 )

01. திருவாவடுதுறை 
02. காஞ்சிபுரம்
03. தருமபுரம்
04. சூரியனார் கோயில் 
05. ஆகம சிவப்பிரகாசாதீனம் (சிதம்பரம்)
06. செங்கோல் ஆதீனம் (பெருங்குளம், திருநெல்வேலி)
07. திருஞானசம்பந்தர் ஆதீனம் (மதுரை)
08. திருவண்ணாமலை ஆதீனம் (குன்றக்குடி)
09. இராமேச்சுரம் ஆதீனம்
10. நீலப்பாடி ஆதீனம் (தஞ்சாவூர்)
11. தாயுமான சுவாமிகள் ஆதீனம் 
12. சாரமாமுனி ஆதீனம் (திருச்சிராப்பள்ளி)
13. சொர்க்கபுர ஆதீனம் (அம்பர் மாகாளம்)
14. வேளக்குறிச்சி ஆதீனம் (திருவாரூர்)
15. வள்ளலார் ஆதீனம் (சீகாழி)
16. வருணை ஆதீனம் (வேதாரணியம்)
17. நாய்ச்சியார் கோவில் ஆதீனம் (கும்பகோணம்)
18. நிரம்ப அழகிய தேசிகர் ஆதீனம் (மதுரை - துழாவூர்)

                                            என்று சைவ ஆதீனங்களின் பட்டியல் ஒன்று காணப்படுகின்றது.

             இவை பெரும்பாலும் அவையவை நிலையாகத் தங்கியிருந்து சைவ நெறியினை வளர்க்கும் பணியினைச் செய்த தலங்களின் பெயர்களாக அமைந்துள்ளன. சில ஆதீனங்கள் அவற்றை நிறுவிய ஆசாரியரின் பெயரில் அமைந்துள்ளன. 

         இன்றைய நிலையில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம் , மதுரை ஆதீனம் ஆகியவை பலராலும் நன்கு அறியப்பட்ட ஆதீனங்களாக விளங்குகின்றன. பல ஆதீனங்கள் பெயரளவில் அறியப்படுவனவாக உள்ளன. இவையன்றி வீரசைவ ஆதீனங்களும் பல உள்ளன.

குறிப்பு :- 
             சைவ ஆதீனங்கள், வீர சைவ ஆதீனங்கள் என்னும் பெயரில் ஊரன் அடிகள் (வடலூர்) என்பவர் அரிதின் முயன்று வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார்கள்.

 


Friday, 4 July 2014

சைவன் - சைவம்

சிவமயம்
 
சைவன் - சைவம் 
- பேராசிரியர் முனைவர் ர. வையாபுரி எம்.ஏ., பிச்.டி., 


         
          சிவபரம் பொருளை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுபவன் சைவன்.  அமங்கலமாகிய  மலசம்பந்தத்திலிருந்து நீங்கி மங்கலமாகிய சிவசம்பந்தத்தைப்  பெற முயலுபவன் சைவன்.
 
       இவ்வழிபாட்டுக்கும், முயற்சிக்கும் உரிய நெறியினை உணர்த்தும் சிவாகமங்கள் சைவ நூல் எனப்படும். ஆதலின் சிவாகமம் உணர்த்தும் நெறி சைவம் எனப்படும். இந்நெறியில் ஒழுகுபவன் சைவன் எனப்படுவான்.
 
          புலால் உண்ணாமை சைவன். சிவாலய வழிபாடு செய்பவன் சைவன். எனினும், சிவநெறியில் அடிப்படைப் பொருள்களாக - என்றும் உள்ள பொருளாக-க் கூறப்படும் இறைவன், ஆன்மா, ஆணவ மலம், கன்ம மலம், மாயை (சுத்த மாயை, அசுத்த மாயை) என்னும் கொள்கையை ஏற்றுக் கொள்பவன் சைவன்.
 
          உலகியல் அனுபவம் நிகழும் (பெத்த) நிலையிலும் சிவானுபவம் நிகழும் (சுத்த) நிலையிலும் சிவமும் ஆன்மாவும் இரண்டு என்று கருதப்படாமல் - ஒன்று என்றே கருதுமாறு - பிரிப்பின்றி (அத்துவிதமாக) க் கலந்து நிற்கின்றன என்னும் கொள்கையை ஏற்றுக் கொள்பவன் சைவன்.
 
    முத்தி நிலையில் சிவமும் உண்டு. ஆன்மாவும் உண்டு. சிவம் ஆன்மாவுக்குச் சிவானந்தத்தைத் தருகின்றது. ஆன்மா சிவானந்தத்தைப் பெற்று அனுபவிக்கின்றோம் என்ற முனைப்பின்றி அதில் அழுந்தி நிற்கின்றது. இச்சிவானந்த அனுபவம் நிகழ்வதற்குத் திருவருள் துணை செய்கின்றது. இச்சிவானந்த அனுபவம் நிகழ ஒட்டாமல் தடை செய்வதற்குரிய ஆணவ மல சத்தி தடை செய்ய இயலாமல் ஒடுங்கி நிற்கிறது என்னும் கொள்கையினை ஏற்றுக் கொள்பவன் சைவன் எனப்படுவான்.

Saturday, 28 June 2014

உமாபதி சிவம் அருளிய திருவருட்பயன்


உமாபதி சிவம்
அருளிய

திருவருட்பயன்


நூல் குறிப்பு :-

     நூலாசிரியர்          :  உமாபதி சிவம்

     பக்கங்கள்              :  224

     விலை                    : ரூபாய் 120/- (Rs. one twenty only only)

     வெளியீடு             சைவ சித்தாந்த சபை, 
                                          9-பி, முத்துசாமி சந்து,
                                         இரண்டாவது தளம்,
                                         ஈரோடு 638 001,
                                         தமிழ் நாடு,
                                         இந்தியா.



உரைமுகம்:-
         திருவருட்பயன் என்னும் இந்நூல் மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் எட்டாவது நூலாக இடம் பெற்றுள்ளது. திருவருளினது பயனை உணா்த்தும் நூல் என்பது இதன் பொருள். எனவே திருவருள் என்பது யாது? அதன் பயன் யாது? அப்பயனைப் பெறுபவா் யார்? அப்பயனை ஏன் பெறுதல் வேண்டும்? அப்பயன் எப்போது கிடைக்கும்? எவ்வாறு கிடைக்கும்? அப்பயனைப் பெற்றவா் எவ்வாறு இருப்பா்? எவ்வாறு இருத்தல் வேண்டும்? கிடைத்த பயன் நிலைத்திருக்குமா? நீங்குமா? நீங்கும் எனில் நீங்காது இருப்பதற்கு என்ன செய்தல் வேண்டும்? என்பன போன்ற கேள்விகள் எழும். அக்கேள்விகளுக்கெல்லாம் விடைகள் இந்நூலுள் உள்ளன.

நூலாசிரியா்:-
         இந்நூலை அருளியவா் உமாபதிசிவம் ஆவார்.

நூலமைப்பு:-
         இந்நூல் பதிமுதுநிலை முதலாக அணைந்தோர் தன்மை ஈறாகப் பத்து அதிகாரங்களை உடையது. இவற்றின் வேறாக நூலின் தொடக்கத்தில் ஆனைமுகத்தோன் வணக்கமாக ஒரு குறள் அமைந்துள்ளது. ஒவ்வோரதிகாரமும் பத்துப்பத்துக் குறள் வெண்பாக்களை உடையது. இவ்வகையில் இந்நூல் திருவள்ளுவநாயனார் அருளிய திருக்குறள் என்னும் நூலைப்போல் அமைந்துள்ளது. திருவள்ளுவா் அறம், பொருள், இன்பம் என்னும் மும்முதற் பொருளையும் வெளிப்படையாக உணா்த்தி, வீட்டு நெறியை நுனித்துணருமாறு வெளிப்படையாகத் தனிப்பாலில் கூறாது போயினார். இவ்வாசிரியா் அதனைத் தனியே எடுத்து ஒரு நூலாக ஆக்கி விளக்கமாக உணா்த்திச் சென்றார்.

இந்நூலின் இன்றியமையாமை:-
         உமாபதிசிவம் அருளிய சிவப்பிரகாசம் என்னும் நூலினை உணா்ந்து 

கொள்வதற்கு இந்நூல் இன்றியமையாதது.

Wednesday, 25 June 2014

சிவநேயச்செல்வா்களே ஓா் அறிவிப்பு

ஈரோடு சைவ சித்தாந்த சபையின் 47 ஆவது சிறப்புச் சொற்பொழிவு





இந்நிகழ்ச்சி வரும் ஜய ஆண்டு ஆனி மாதம் 15 ஆம் நாள் (ஜுன் மாதம் 5 ஆவது ஞாயிற்றுக்கிழமை 29-06-2014) அன்று  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இடம்:  ஈரோடு செங்குநதா் நா்சாி & பிரைமாிப் பள்ளி வளாகம் , ஈரோடு.
தொடா்புக்கு சைவ சித்தாந்த சபை
                             9-பி, முத்துசாமி சந்து,
                             இரண்டாவது தளம்,
                             ஈரோடு 638 001,
                             தமிழ் நாடு,
                             இந்தியா.
                             செல்: 94432-51731


சிவநேயச்செல்வா்களே அனைவரும் வருக! சிவானந்தத் தேன் பருகுக!

காலவ முனிவர் பெற்ற ஞானமும் முத்தியும்




நூல் குறிப்பு :-

     உரையாசிரியர்    :  பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள்

     பக்கங்கள்              :  136

     விலை                    : ரூபாய் 45/- (Rs. Forty five only)

     வெளியீடு             சைவ சித்தாந்த சபை, 
                                          9-பி, முத்துசாமி சந்து,
                                         இரண்டாவது தளம்,
                                         ஈரோடு 638 001,
                                         தமிழ் நாடு,
                                         இந்தியா.

Sunday, 22 June 2014

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)


ஔவையார் அருளிய

விநாயகர் அகவல் 
(மூலமும் உரையும்)

நூல் குறிப்பு :-

     உரையாசிரியர்    :  பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள்

     பக்கங்கள்              :  32+180

     விலை                    : ரூபாய் 120/- 

     வெளியீடு             சைவ சித்தாந்த சபை, 
                                          9-பி, முத்துசாமி சந்து,
                                         இரண்டாவது தளம்,
                                         ஈரோடு 638 001,
                                         தமிழ் நாடு,
                                         இந்தியா.

பேய்த் தொழிலாட்டி பத்திரகாளி


பேய்த் தொழிலாட்டி பத்திரகாளி


நூல் குறிப்பு :-


     உரையாசிரியர்    :  பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள்

     பக்கங்கள்              :  28

     விலை                    : ரூபாய் 12/- (Rs. Twelve only)

     வெளியீடு             சைவ சித்தாந்த சபை, 
                                          9-பி, முத்துசாமி சந்து,
                                         இரண்டாவது தளம்,
                                         ஈரோடு 638 001,
                                         தமிழ் நாடு,
                                         இந்தியா.

பேரூர் வேலப்பதேசிகர் அருளிய பஞ்சாக்கரப் பஃறொடை


பேரூர் வேலப்பதேசிகர்
அருளிய

பஞ்சாக்கரப் பஃறொடை



நூல் குறிப்பு :-


     உரையாசிரியர்    :  பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள்

     பக்கங்கள்              :  34 + 254= 288

     விலை                    : ரூபாய் 120/- (Rs. One twenty only)

     வெளியீடு             சைவ சித்தாந்த சபை, 
                                          9-பி, முத்துசாமி சந்து,
                                         இரண்டாவது தளம்,
                                         ஈரோடு 638 001,
                                         தமிழ் நாடு,
                                         இந்தியா.


முன்னுரை:-

        பஞ்சாக்கரப் பஃறொடை என்னும் இந்நூல் சீலத்திரு பேரூா் வேலப்ப தேசிகா் என்னும் ஆசாரியமூா்த்திகளால் அருளப்பட்டது. பஞ்சாக்கரம் - திருவைந்தெழுத்து. பஃறொடை – வெண்பாவின் வகைகளுள் ஒன்று. பல தொடைகளான் இயன்ற நெடும்பாட்டு.
   இந்நூல் நாற்பத்திரண்டு கண்ணிகளை உடையதாக – 84- வரிகளில் இயற்றப்பட்டுள்ளது.
  வேலப்பதேசிகர் இந்நூலில் திருவைந்தெழுத்தை அடிப்படையாக வைத்துப் பொதுவாகச் சைவ சித்தாந்தத்தையும் சிறப்பாக நின்மல அவத்தை, தசகாரியங்கள் என்பவற்றையும் விளக்கியிருக்கின்றார். இந்நூலின் பொருள், வேலப்பதேசிகர் தமது ஆசாரிய மூர்த்திகளாகிய திருவாவடுதுறை ஆதீனத்துக் குருமகா சந்நிதானங்களினிடத்து (பத்தாவது பட்டம்) உபதேச முறையில் பெற்றாதாகும்.
  இந்நூல் திருவாவடுதுறை ஆதீனத்துப் பண்டார சாத்திரங்கள் பதினான்கனுள் இடம் பெற்ற சிறப்புடையது. தசகாரியம் பற்றிக்கூறும் வேறு மூன்று நூல்கள் பண்டார சாத்திரத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. எனினும் தசாகாரியத்தை விளக்கிக் கட்டுரை எழுதும் அறிஞர்கள் இந்நூலை ஆதாரமாகக் கொண்டே எழுதுகின்றனர். இது கொண்டு இந்நூலின் சிறப்பு எத்தைகையது என்பதை உணா்ந்து கொள்ளலாம்.
    முனைவா் ர.வையாபுாரி அவர்களின் உரையைத் தழுவி ஆங்கிலத்தில் விளக்கம் எழுதியுள்ளார் நம் ஆதினத்தில் ”சித்தாந்தச் செம்மணி” என்னும் விருதினை வழுங்கிக் கவுரவிக்கப்பட்ட   முனைவர்.  கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்கள்.    




பேரின்ப வெள்ளம் மாறிலா மகிழ்ச்சி


பேரின்ப வெள்ளம் மாறிலா மகிழ்ச்சி


நூல் குறிப்பு :-


     உரையாசிரியர்    :  பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள்

     பக்கங்கள்              :  23 + 4= 27

     விலை                    : ரூபாய் 10/- (Rs. Ten only)

     வெளியீடு             சைவ சித்தாந்த சபை, 
                                          9-பி, முத்துசாமி சந்து,
                                         இரண்டாவது தளம்,
                                         ஈரோடு 638 001,
                                         தமிழ் நாடு,
                                         இந்தியா.

வினா வெண்பா (மூலமும் உரையும்)




கொற்றவன்குடி உமாபதிசிவம் 
அருளிய 

வினா வெண்பா
(மூலமும் உரையும்)



நூல் குறிப்பு :-


     நூலாசிரியர்          :  பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள்

     பக்கங்கள்              :  222 + 30 =252

     விலை                    : ரூபாய் 120/- (Rs. One twenty only)

     வெளியீடு              சைவ சித்தாந்த சபை, 
                                          9-பி, முத்துசாமி சந்து,
                                          இரண்டாவது தளம்,
                                          ஈரோடு 638 001,
                                          தமிழ் நாடு,
                                          இந்தியா.


நூற்பெயர் விளக்கம் :-

                     வினாவெண்பா என்னும் இந்நூல் மெய்கண்டசாத்திரத் தொகுப்பில் ஒன்பதாவது நூலாகத் திருவருட்பயனை அடுத்து அமைந்துள்ளது. உமாபதிசிவம் அருளிய எட்டு நூல்களில் மூன்றாவது நூலாகச் சிவப்பிரகாசம், திருவருட்பயன் என்பவற்றை அடுத்து இந்நூல் அமைந்துள்ளது. சிவப்பிரகாசம் என்னும் நூல் சைவசித்தாந்தத் தத்துவஞானம் முழுவதையும் பொது, உண்மை எனப்பகுத்து விாிவாக 100 திருவிருத்தத்தில் கூறுகிறது. அதனையே திருவருட்பயன் பக்குவமுடைய ஆன்மாவுக்குத் திருவருள் குருவடிவம் கொண்டு முன்நின்று உபதேசித்தல், அதனால் அவ்வான்மா பயன்பெறுதல் ஆகிய வகையில் சுருக்கமாகப் பத்து அதிகாரமாகப் பகுத்துக் கொண்டு ஒவ்வோரதிகாரத்துக்கும் பப்பத்துக் குறட்பாக்களாக நூறு குறட்பாக்களில் கூறுகின்றது.


     அவ்விரண்டையும் அடுத்துள்ள வினா வெண்பா என்னும் இந்நூல் அங்ஙனம் உபதேசம் பெற்ற மாணாக்கன் தனக்கு ஏற்பட்ட ஐயங்களை ஆசாாியாிடத்து வினாவும் முறையில் பதின்மூன்று வெண்பாக்களை எடையதாக அமைந்துள்ளது. வினா வெண்பா என்னும் இப்பெயா் இந்நூலுக்கு நூலாசிாியராலேயே இடப்பட்ட பெயா் என்பதனை இந்நூலின் இறுதிப்பாடலால் அறியலாம்.

             சைவ சித்தாந்தாம் பயில்பவா்கள் சிவஞானபோதம், சிவஞானசித்தியாா், திருவருட்பயன், சிவப்பிரகாசம், என்பவற்றை பயின்று அதன்மேல் இருபாஇருபஃது என்னும் நூலினையும் வினாவெண்பா என்னும் இந்நூலினையும் பயிலுதல் வேண்டும்.      


   






அசபா நடனப் பதிகம்



தருமை 
ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 
அருளிய

 அசபா நடனப் பதிகம்


நூல் குறிப்பு :-


     உரையாசிரியர்    :  பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள்

     பக்கங்கள்              :  170 +22

     விலை                    : ரூபாய் 80/- (Rs. Eighty only)

     வெளியீடு             சைவ சித்தாந்த சபை, 
                                          9-பி, முத்துசாமி சந்து,
                                         இரண்டாவது தளம்,
                                         ஈரோடு 638 001,
                                         தமிழ் நாடு,
                                         இந்தியா.


நூற்பெயர் விளக்கம் :-

          அசபாநடனம் எனப்படும் நடனத்தை ஆடும் திருவாரூர்த் தியாககேசப் பெருமானைப் பொருளாகக் கொண்டு பாடப்பெற்ற பத்துப் பாடல்களைக் கொண்ட நூல் என்பது பொருள். 
      அசபை - இது ஒரு மந்திரத்தின் பெயர். செபிக்கப்படாதது என்னும் பொருளை உடையது.  நடனம் - ஈசன் ஆடும் நடனம். இங்குத் திருவாரூர்த் தியாகராசப் பெருமானைக் குறித்தது. தில்லை நடராசப் பெருமானைக் குறித்தன்று. பதிகம் - பத்துப் பாடல்களைக் கொண்ட நூல். இது சிறு பிரபந்த வகையைச் சார்ந்தது.

நூலாசிரியர் :-
      
               இந்நூலினை அருளியவர் தருமையாதீனத்துப் பத்தாவது குருமகா சந்நிதானம் சீர் சிவஞான தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு. இவர் பல பதிகங்கள் அருளியுள்ளார். அவை  “திருவருட்பாத் திரட்டு” எனத் தொகுத்து வெளியிடப்பெற்றுள்ளன. 






புடைநூலும் (சிவப்பிரகாசம்) பன்னிரு சூத்திரங்களும்



புடைநூலும் 
(சிவப்பிரகாசம்)
பன்னிரு சூத்திரங்களும்


நூல் குறிப்பு :-


     நூலாசிரியர்         :  பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள்

     பக்கங்கள்              :  156 +24

     விலை                    : ரூபாய் 60/- (Rs. Sixty only)

     வெளியீடு             சைவ சித்தாந்த சபை, 
                                          9-பி, முத்துசாமி சந்து,
                                         இரண்டாவது தளம்,
                                         ஈரோடு 638 001,
                                         தமிழ் நாடு,
                                         இந்தியா.



          புடைநூல் என இந்நூலில் குறிக்கப்படுவது மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றான, உமாபதி சிவம் அவர்களால் அருளப் பெற்ற தவப்பிரகாசர்கள் போற்றும் சிவப்பிரகாசம் ஆகும். பன்னிரு சூத்திரங்கள் என்று குறிக்கப் பெறுவது சிவஞானபோதம் ஆகும். மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் முதனூல் என்றும் அவர் மாணாக்கராகிய அருள்நந்தி சிவம் அருளிய சிவஞானசித்தியார் வழிநூல் என்றும் அவருடைய சந்தானத்தில் வந்த உமாபதிசிவனார் அருளிய சிவப்பிரகாசம் சார்பு அல்லது புடைநூல் என்றும் அழைக்கும் மரபு ஆதீன சம்பிரதாயங்களில் வழங்கி வருகின்றன. இச்சம்பிரதாயம் பற்றிய ஆய்வும், சிவப்பிரகாசம் நூல் அமைப்பு பற்றிய ஆய்வும் இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


புடைநூலும் பன்னிரு சூத்திரங்களும் என்னும் இந்நூல்
  1. நூல் வகைகளுள் புடைநூல் என்றொருவகை உண்டா ?
  2. அதற்குக் கூறும் இலக்கணம் வரையறையானதா?
  3. மெய்கண்ட நூல்களுள் சிவப்பிரகாசம் புடைநூலா ?
  4. அது சிவஞானபோதம், சிவஞானசித்தியார் போன்று சித்தாந்த சைவத்தத்துவ ஞானத்தைப் பன்னிரு சூத்திரமாகப் பாகுபாடு செய்து உணர்த்துகின்றதா?
  5. பலகலையும் என்னும் பாடலின் வடிவம் யாது?
என்பவற்றை ஆராய்கின்றது.